டெல்லி:

ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் வழக்கிய தீர்ப்பை தொடர்ந்து, ராமர்கோவில் கட்டுவதற் கான பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. இது தொடர்பான விவகாரங்களை கவனிக்க  3 அதிகாரிகளைக் கொண்ட குழு மத்திய  உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வந்த அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில், உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு (2019) நவம்பர் மாதம் 9ந்தேதி வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதையடுத்து, அங்கு ராமர்கோவில் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக பல்வேறு பரிந்துரைகள், ஆலோசனைகள் குறித்து கவனித்து தேவையான நடவடிக்கைள் எடுப்பது குறித்து, 3 உயர் அதிகாரிகளை கொண்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.

மத்திய உள்துறையின் கூடுதல் செயலாளர் ஜியானேஷ் குமார் தலைமையில், 3 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள்  அயோத்தி தொடர்பான அனைத்து விவகாரங்களையும்  கவனிப்பார்கள் என கூறப்பட்டு உள்ளது.

ஜியானேஷ் குமார் ஏற்கனவே காஷ்மீர், லடாக் விவகாரங்களை கவனிக்கும் அதிகாரிகள் குழுவின் தலைவராகவும் உள்ளார். மத்திய அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையில் அவர் முக்கிய அதிகாரியாக இருந்தவர்.

அதேபோல உள்நாட்டு பாதுகாப்புக்கு என்று 2 பிரிவுகள் இருந்தது ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு இணை செயலாளர் (பெண்கள் பாதுகாப்பு) புனியா சாலிலா ஸ்ரீவத்சவா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.