டெல்லி: பொதுத்தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் வகையில் அரசு பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தது. முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் விதிகள் முன்மொழியப்பட்ட சட்டத்தில் அடங்கும்.

தேர்வுத் தாள் கசிவுகள் தொடர்பான சிக்கலைக் கருத்தில் கொண்டு, இந்த மசோதா ஒரு தனித்துவமான சட்ட கட்டமைப்பை அறிமுகப்படுத்துகிறது, இது கட்டாய குறைந்தபட்ச மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையை உள்ளடக்கிய கடுமையான தண்டனைகளை பரிந்துரைக்கிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இடைக்கால பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அவை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பொதுத் தேர்வுகள் முறைகேட்டை தடுப்பதற்காக சட்ட மசோதா 2024ஐ பணியாளர் மற்றும் பயிற்சித் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங்கால் மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது, மகடந்த காலங்களில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளுக்காக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பல மாநிலங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். போட்டி மற்றும் நுழைவுத் தேர்வுகளை இலக்காகக் கொண்ட மசோதா, பொதுத் தேர்வுகளில் இணைய பாதுகாப்பின் சவால்களை சமாளிக்க உயர்மட்ட தொழில்நுட்பக் குழுவை அமைக்கப்பட உள்ளது.

பொதுத் தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் நம்பகத்தன்மையைக் கொண்டு வருவதும், இளைஞர்களின் நேர்மையான முயற்சிகளுக்கு நியாயமான வெகுமதி கிடைக்கும் என்றும், அவர்களின் எதிர்காலம் பாதுகாப்பை உறுதியளிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும்.

இந்த மசோதா UPSC, பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் NEET மற்றும் JEE போன்ற நுழைவுத் தேர்வுகளை உள்ளடக்கியது. உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் சேர்க்கைக்கான தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க அரசாங்கம் பல சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தியுள்ளது.

சுய சான்றொப்பத்தை அறிமுகப்படுத்துதல், தேர்வு சுழற்சியை (18-22 மாதங்களில் இருந்து 6-10 மாதங்கள் வரை) குறைத்தல், குரூப் ‘சி’ மற்றும் ‘டி’ பதவிகளுக்கான நேர்காணல்களை நீக்குதல், கணினி அடிப்படையிலான தேர்வுகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வழங்குதல் ஆகியவை அடங்கும்.

பொதுத் தேர்வுகளை நடத்துவதில் தொழில்நுட்பத்தின் பங்கு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொதுத் தேர்வுகளுக்கான தேசிய தொழில்நுட்பக் குழுவை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

இந்த மசோதாப்படி,   போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளுக்கு எதிராக கடுமையான விதிகள்  சேர்க்கப்பட்டு உள்ளன. அதன்படி, தேர்வில் மோசடி செய்வபர்களுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிக பட்சம்  10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க சட்டம் வழிவகுக்கிறது.