நியூயார்க்:
கொரோனா வைரஸ் எனும் மக்கள் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க அல்லது ஒழிக்க நாடுகள் ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்ற மக்கள் பெருந்தொற்று தடுப்பாற்றல் உத்தியை நோக்கி நகர வேண்டாம், அது ‘அறம் அற்ற செயல்’என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ராஸ் அதனாம் கேப்ரியேசஸ், அம்மை உள்ளிட்ட வைரஸ் தொற்று நோய்களுக்கு 95% மக்கள் தொகை நோய்த்தடுப்பூசி அளிக்கப்பட்டு தடுப்பாற்றல் பெற்றிருப்பது அவசியம் என்கிறார்.

ஹெர்டு இம்யூனிட்டி என்ற மக்கள் பெருந்தொற்று கூட்டுத் தடுப்பாற்றல் என்பது மக்களை அந்த கிருமி தொற்றாமல் தடுப்பதில் தான் இருக்கிறதே தவிர, அதிகம் பேரை வைரஸுக்குப் பாதிக்கச் செய்யுமாறு செய்து விட்டால் அது ஹெர்டு இம்யூனிட்டி ஆகி விடும் என்று தப்புக் கணக்குப் போட வேண்டாம் என்று கேப்ரியேசிஸ் எச்சரிக்கிறார்.

சில ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று பெரும்பாலான மக்களிடத்தில் தொற்றி விட்டால் அது ஹெர்டு இம்யூனிட்டியை ஏற்படுத்தும் என்று வாதிடுகின்றனர். இதனால் லாக் டவுன் ஏற்படுத்தும் பொருளாதார அழிவுகளிலிருந்து மீளலாம் என்று நம்புகின்றனர்.

வரலாற்றில் ஒரு போதும் பொதுச்சுகாதாரத்துக்கு தொற்று நோய் ஏற்பட்டு பெரும் கேடு ஏற்படும்போதெல்லாம் அனைவருக்கும் பரவவிட்டு ஹெர்டு இம்யூனிட்டி அடையும் போக்கு இருந்ததில்லை, ஒருபோதும் இப்படி நடந்ததும் இல்லை.

அப்படியே ஹெர்டு இம்யூனிட்டி இந்தமுறையில் சாதிக்க முடியும் என்பதற்கு ஆதாரமாக கரோனாவுக்கு எதிரான தடுப்பாற்றல் என்னவென்றும் இன்னும் தெரியவில்லையே.. அப்படியிருக்கும் போது ஹெர்டு இம்யூனிட்டியை பரவலின் மூலம் சாதிக்க நினைப்பது எப்படி முடியும்.

நம்மிடையே சில துப்புகள் மட்டுமே உள்ளனவே தவிர முழுமுற்றான சித்திரம் கொரோனா பற்றி இல்லை. கரோனாவிலிருந்து மீண்டவர்கள் கூட மீண்டும் கரோனாவினால் பாதிக்கப்படுவதைப் பார்த்து வருகிறோம்.

பெரும்பாலானோருக்கு நோய்த்தடுப்பாற்றல் எதிர்வினை மேம்பாடு அடைந்திருக்கலாம், ஆனால் அது எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை, அது எந்த அளவுக்கு பலமான பாதுகாப்பு என்பதும் தெரியவ்வில்லை. ஏனெனில் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு விதமான நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது, ஒவ்வொரு விதமாக வினையாற்றுகிறது.

எனவே ஹெர்டு இம்யூனிட்டிப் பற்றி தப்பும்தவறுமாகப் புரிந்து கொண்டு வைரஸை பரவவிடுவது என்பது அறமற்ற செயல். என்று உலகச் சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் 10%க்கும் குறைவான மக்களிடத்தில்தான் உள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் இன்னமும் கரோனாவுக்கு பாதிக்கப்படும் நிலையில்தான் உள்ளனர்.

சமீபமாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் தினசரி கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருவதாகவும் உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.