நியூயார்க்

க்ரைனின் அணை உடைப்பால் உலக அளவில் உணவு  பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என ஐநா கருத்து கூறி உள்ளது.

ஜூன் 6-ம் தேதி உக்ரைன் நாட்டில் உள்ள டினிப்ரோ ஆற்றின் மீது கட்டப்பட்ட  மிகப்பெரிய அணையான ககோவ்கா அணை உடைந்தது. இதனால் 18 கியூபிக் கி.மீ. பரப்பளவு தண்ணீர், தென் உக்ரைன் பகுதியை மூழ்கடித்தது. அணை உடைந்ததற்கு உக்ரைனும், ரஷ்யாவும் பரஸ்பரம் குற்றம் சாட்டின.

இந்த அணை உடைப்பின் தாக்கம் குறித்து ஐ.நா. சபையின் உதவிகளுக்கான தலைவர் மார்ட்டின் கிரிஃபித்ஸ்,

“இந்த தாக்குதலால் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் உணவுப் பொருட்களின் விலை உயர்வும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்குக் குடிநீர் கிடைப்பதில் பிரச்சனைகளும் ஏற்படலாம் –

கோதுமை, பார்லி, சோளம், ராப்சீட், ராப்சீட் எண்ணெய், சூரியகாந்தி விதை மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியில் உக்ரைன் மற்றும் ரஷியா முக்கிய பங்கு வகிக்கின்றன. அணை உடைப்பின் காரணமாக, வரப்போகும் பயிரிடும் காலங்களில் இவற்றை விதைப்பதிலும், அறுவடை செய்வதிலும் மிகப்பெரிய சிக்கல் வருவது தவிர்க்க முடியாதது.

மேலும் சுமார் 7 லட்சம் பேர் வரை குடிநீருக்காக அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தை நம்பியிருக்கின்றனர். இவர்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் நோய்வாய்ப்படும் வாய்ப்பும், குழந்தைகளுக்கு அதிகமான பாதிப்பும் ஏற்படும்.

ஜெனிவா உடன்படிக்கையின்படி ஏற்படுத்தப்பட்ட சட்டங்களுக்கு எதிரான வகையில், சிவிலியன் உள்கட்டமைப்புக்கு எதிராக இந்த பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. யார் இதை (அணை தகர்ப்பு) செய்திருந்தாலும் ஜெனிவா உடன்படிக்கைகளை மீறியதாகும்”

என்று கூறி உள்ளார்.