டில்லி
கங்கை சுத்தீகரிப்புத் திட்டம் வரும் அக்டோபருக்குள் துவங்காவிடில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக மத்திய அமைச்சர் உமாபாரதி அறிவித்துள்ளார்.
மத்திய பாஜக அமைச்சரவையில் குடிநீர் மற்றும் சுகாதார அமச்சராக உமா பாரதி பதவியில் உள்ளார். இதற்கு முன்பு அவர் மத்திய நீர்வளத்துறை மற்றும் நதிகள் மேலாண்மை துறையில் அமைச்சராக இருந்தார். கடந்த செப்டம்பரில் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு பின் அந்தத் துறையை நிதின் கட்காரி கவனித்து வருகிறார். கங்கை நதி சுத்தீகரிப்புத் திட்டத்தை நிதின் கட்காரியின் அமைச்சரவை கவனித்து வருகிறது
உமா பாரதி நேற்று நடந்த ஒரு ஊழியர் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் நிதின் கட்காரியும் கலந்துக் கொண்டார். உமா பாரதி தனது உரையில், “கங்கை நதி சுத்தீகரிப்புத் திட்டம் ஆரம்பிக்க வேண்டும். அதை வரும் 2018ஆம் வருடம் அக்டோபர் மாதத்துக்குள் துவங்கப் பட வேண்டும். நான் முழுமையாக முடிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை அதற்குள் துவங்கி ஓரளவு வேலைகள் நடைபெறுவதை நான் பார்க்க வேண்டும். அப்படி இல்லையெனில் நான் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்.
கங்கை சுத்தீகரிப்பை நிதின் கட்காரியிடம் கொடுத்ததற்கு நான் மிகவும் மகிழ்கிறேன். சரியான மனிதரிடம் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. காலம் எப்படியும் மாறலாம். ஒரு வேளை இந்த ஆட்சி 2019ஆம் வருடம் பிப்ரவரியுடன் முடிந்தும் போகலாம். அதனால் தான் கங்கை நதி சுத்தீகரிப்பு திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என நான் கூறுகிறேன்” என உமா பாரதி தெரிவித்தார்.