டெல்லி: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.

2021ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி, டெல்லியில் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அதில், வெளிநாட்டு தலைவர்கள், மத்திய அரசின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பர்.

அந்த வகையில், இம்முறை சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழாவில் பங்கேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் ராப் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், போரிஸ் ஜான்சன் கலந்து கொள்வது, இங்கிலாந்து, இந்தியா நாடுகளிடையேயான உறவுகளின் புதிய சகாப்தத்தின் அடையாளம் என்று கூறி உள்ளார். 2021ம் ஆண்டு குடியரசு தினம் கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடைபெறும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.