டெல்லி: பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது மத்திய அரசின் ஊரடங்கு தளர்வு நிபந்தனைகளின்படி படிப்படியாக கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக.  தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் விடுதிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், நிபந்தனைகள் ஆகியவற்றை  பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி அறிவித்து உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

கல்லூரிகளில் 50 சதவீதம் மாணவர்கள் மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். கல்லூரி விடுதிகளில் குறைந்த மாணவர்கள் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும்.

மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகலாம் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்டதும் வரும் விடுதி மாணவர்கள், 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படவேண்டும்.

தங்களுக்கு கொரோனா இல்லை என்று மாணவர்கள் சான்றிதழ் கொண்டு வந்தாலும் அவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு  அறையிலும் ஒரு மாணவர் மட்டுமே தங்க அனுமதிக்க வேண்டும் என்று யுஜிசி தெரிவித்து உள்ளது.