வாஷிங்டன்:

என்னை கூகுள் கண்காணித்து வருவதாகவும், என்னை தோற்கடிக்க சதி செய்வதாகவும், அமெரிக்க அதிபர் டொனால்ட்  டிரம்ப் டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இதுபரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் அடுத்த அதிபர் தேர்தல் வரும் 2020ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில்தன்னை தோற்கடிக்க கூகுள் நிறுவனம் மற்றும் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை விரும்புவதாக டிரம்ப் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

வெள்ளை மாளிகையில், சுந்தர் பிச்சை என்னை சந்தித்த போது,என்னை மிகவும் பிடிக்கும் என கூறியதோடு, எனது நிர்வாகத்தின் பணியை புகழ்ந்து பேசினார். சீன ராணுவத்திற்கு கூகுள் உதவாது. 2016 தேர்தலில் ஹிலாரி கிளிண்டனுக்கு உதவி செய்யவில்லை எனக்கூறினார்.  2020 ம் ஆண்டு நடக்கும் தேர்தலை சட்ட விரோதமாக முறியடிக்க கூகுள் விரும்பவில்லை எனவும் கூறினார்.

ஆனால், கூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட கெவின் கெர்னெகீயின் பேட்டியை பார்க்கும் வரை, அது உண்மை எனதான் நினைத்திருந்தேன். அவர் கூறித் தான் கடந்த தேர்தலில் ஹிலாரி குறித்த எதிர்மறையான தகவல்களை கூகுள் முன்னிலைப்படுத்தியது தெரிய வந்தது.

இதேபோல், 2020 தேர்தலிலும் எனது வெற்றியை தடுக்க கூகுள் திட்டமிட்டுள்ளது. இது சட்டப்படி குற்றம் என்பதால், கூகுள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட கெவின் கெர்னீகீ டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 2016 தேர்தலில் ஹிலாரி வெற்றி பெற வேண்டும் கூகுள் நிறுவனம் செயல்பட்டது. டிரம்ப் தோல்வியடைய வேண்டும் என விரும்பியது.

டிரம்பிற்கு எதிரான நிலைப்பாட்டுடன் செயல்பட்டது குறித்து கேள்வி எழுப்பியதால், பணி நீக்கம் செய்யப்பட்டேன். அடுத்த ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலின் போதும், டிரம்பின் பிரச்சாரத்தை பலவீனப்படுத்த கூகுள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்து கூகுள் நிறுவன செய்தி தொடர்பாளர் கூறியதாவது:–

நாங்கள் ஒற்றை சார்புடனோ அரசியல் சார்புடனோ செயல்படவில்லை என்பதை மீண்டும் உறுதி படுத்துகிறோம். கெவின் கெர்னெகீ கூறிய அனைத்து தகவல்களும் பொய்யானவை. இவை அனைத்தும் பொறாமை மற்றும் பழிவாங்கும் நோக்கில் கூறப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். எங்கள் நிறுவனத்தின் ரகசிய தகவல்களை வெளியிட்டதால் தான், கெவின் கெர்னெகீ பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்றார்.

கூகுள் நிறுவனம் மீது டிரம்ப் குற்றஞ்சாட்டுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2016 தேர்தலின் போது, ஹிலாரி மீதான எதிர்மறை செய்திகளை அந்த நிறுவனம் மறைத்ததாக குற்றஞ்சாட்டினார். பின்னர், மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் நிறுவன அதிகாரி சுந்தர் பிச்சையுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு, இருவரும் ஆலோசனை சூழ்நிலை குறித்து விவாதித்ததாகவும், பிரச்சினை முடிவுக்கு வந்ததாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.