அகர்தலா:

உலக அழகி பட்டம் பெற்ற டயானா ஹெய்டனுக்கு அந்த தகுதி இல்லை. மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதக் கூடாது. சிவில் இன்ஜினியரிங் படித்தவர்கள் தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும் என்று திரிபுரா பாஜக முதல்வர் பிப்லப் குமார் தெப் அதிரடியாக பேசுவதாக நினைத்து பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

இவரது இந்த பேச்சை கேட்டு மோடியே அதிருப்தியடைந்து அவருக்கு நேரில் வர அழைப்பு விடுத்தார். இருந்தும் அவர் அடங்கவில்லை. நேற்று புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

இது தொடர்பான ஒரு விழாவில் திரிபுரா முதல்வர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ புத்தர் இந்தியா, பர்மா, ஜப்பான், திபெத் உள்ளிட்ட நாடுகளுக்கு நடை பயணம் மேற்கொண்டார்’’ என்று பேசினார். இது கூட்டத்தில் கலந்து கொண்ட பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

ஏன் என்றால்? புத்தர் இந்த நாடுகளுக்கு தனது வாழ்நாளில் சென்றதே கிடையாது என்று வரலாற்று ஆய்வர்கள் தெரிவித்துள்ளனர். இதர மக்கள் மூலமே இந்த நாடுகளில் புத்த மதம் பரவியது என்று தெரிவித்துள்ளனர். இப்படி தப்பு தப்பாக பேசும் திரிபுரா முதல்வர் சமூக வலை தளங்ளில் மீண்டும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.