ஜெய்ப்பூர்

ழங்குடி மக்களை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்னும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்கள் நலனுக்காக கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வன உரிமைகள் சட்டம் 2008 இயற்றபட்டது. இந்த சட்டத்தின்படி பாரம்பரியமாக வனப்பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினர் சட்டபூர்வமாக தாங்கள் அங்கு தொடர்ந்து இருந்து வருவதை உறுதிப்படுத்தி அங்கேயே வசிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பெங்களூருவை மையமாக கொண்ட வனவிலங்கு நல தன்னார்வ அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்து 2008 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பட்டா இல்லாமல் வசித்து வரும் பழங்குடியினருக்கு புதிய பட்டா வழங்கக் கூடாது எனவும் அவர்களை அரசு உடனடியாக வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனவும் தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புக்கு பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தானில் சுமார் 37000 பழங்குடி குடும்பங்கள் இந்த சட்டத்தால் பாதிப்பு அடைய உள்ளனர். இதில் பன்ஸ்வாரா பகுதியில் மட்டும் 16000 குடும்பங்கள் பாதிப்பு அடைவார்கள். அது மட்டுமின்றி இதே நிலை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள பழங்குடியினருக்கு ஏற்பட உள்ளது.

இது குறித்து பாரதிய பழங்குடியினர் கட்சி தலைவ்ர் வேலா ராம் கோக்ரா, “மோடியின் அரசு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் சரியான விளக்கம் அளிக்கவில்லை. அதனால் எங்களை வெளியேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்களை விரட்டி விட்டு இந்த பகுதிகளை கார்பரேட்டுக்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

ஆகவே எங்களை சட்டரீதியாக மிரட்டி இங்கிருந்து துரத்த ஏற்பாடு செய்துள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்துக்கும் வன உரிமைகள் சட்டத்துக்கும் எதிரானதாகும். இதை எதிர்த்து நாங்கள் போராட்டம் நடத்த தயாராகி உள்ளோம். இந்த முடிவினால் வரும் மக்களவை தேர்தலில் மோடி அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்துள்ளார்.