டில்லி

டில்லி காவல்துறையினர் ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி போக்குவரத்து மற்றும் வியாபாரத்துக்கு தடை விதித்துள்ளனர்.

டில்லியில் வரும் 9 மற்றும் 10 தேதிகளில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஓராண்டாக டெல்லியில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றன.  jஇ 20மாநாட்டுக்காக டெல்லி பிரகதி மைதானத்தில் பாரத் மண்டபம் என்ற பெயரில் புதிய மண்டபம் கட்டப்பட்டு மண்டபத்தின் முகப்பில் தமிழகத்தின் நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.

மாநாடு நடைபெறும் டில்லியை காவல்துறை தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இங்கு வெளிநாட்டுத் தலைவர்கள் வந்து தங்கும் ஓட்டல்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு ஓட்டலின் நுழைவு வாயில்கள் முன் உள்ள சாலைகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் பிரகதி மைதானத்தின் முன்புற ரோடும் கட்டுப்பாட்டில் உள்ளது.

டில்லி  மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை காவல்துறையினர் கூடுதலாக குவிக்கப்பட்டு ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.  நாளை முதல் 10 ஆம் தேதி வரை மாநாட்டையொட்டி ம் கடுமையான கட்டுப்பாடுகள் கையாளப்படுகிறது.

மாநகரம் முழுவதும் போக்குவரத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. பல இடங்களில் வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டு உள்ளது.  ஜி 20 மாநாட்டுக்கு வரும் தலைவர்கள் டில்லியில் பல இடங்களையும் சுற்றிப் பார்ப்பார்கள் என்பதால் இந்த 3 நாட்களும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.  டில்லியில் எந்த வணிக நிறுவனங்களும் செயல்படாது. உணவு வினியோகம் உள்ளிட்ட ஆன்லைன் வியாபாரம் எதுவும் நடைபெறாது.

மக்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பிக்னிக் என மன ஆறுதலுக்காக வந்து செல்லும் இடமும், சுற்றுலாப் பயணிகளின் வருகைத்தளமுமான கடமைப்பாதைக்கு இந்த 3 நாட்களில் யாருக்கும் அனுமதி இல்லை எனக் காவல்துரையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

விமான பயணம் மற்றும் ரயில் பயணத்துக்காகத் திட்டமிட்டு இருப்பவர்கள் போக்குவரத்து ஆலோசனைகளை முன்கூட்டியே அறிந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.  மேலும் வாகன போக்குவரத்தில் மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு முதல் 10 ஆம் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.