சென்னை

நாளை கர்நாடகாவில் பந்த நடைபெற உள்ளதால் தமிழக பேருந்துகள் கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட உள்ளன.

கர்நாடக அரசு அம்மாநிலத்தில் பருவமழை பொய்த்துப்போன நிலையிலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்குக் காவிரி நீரை திறந்து விட்டது. கர்நாடகத்தில் இதைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. கடந்த 18 அன்று மாண்டியாவில் விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அங்கு விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடக நீர் பாதுகாப்புக் குழு, கர்நாடக கரும்பு விவசாயிகள் சங்கம் ஆகியவை சார்பில் பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கன்னட அமைப்புகளின் கூட்டுத்தலைவர் வாட்டாள் நாகராஜ் நாளை  கர்நாடகா முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த போராட்டம் நாளை தீவிரமானதாக இருக்கும் என்றுவாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

கன்னட அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பெங்களூருவில் இன்று இரவு முதல் நாளை இரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த அடைப்பின் போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் கர்நாடகா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட உள்ளது.

நாளை கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறுவதால் தமிழக பேருந்துகள் எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி பெங்களூரு செல்லும் அனைத்து பேருந்துகளும் தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை மட்டுமே இயக்கப்படும் எனவும் இரு மாநில எல்லைப் பகுதியில் சூழ்நிலையைப் பொறுத்து பேருந்து சேவை தொடரும் என்றும் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.