டில்லி

குடியரசுத்தலைவர் தேர்தல், நாளை நடைபெறுகிறது.   தேர்தலில் வென்றவருக்கு ஜூலை 25ஆம் தேதி தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைப்பார்.

நாளை நடைபெற உள்ள குடியரசுத்தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  பாராளுமன்றத்தில் அறை எண் 62ல் இந்த தேர்தல் நடைபெறுகிறது.  பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய மூவரும் இந்த அறையில் ஆறாம் எண் மேஜையில் வாக்களிப்பார்கள்.

வாக்குச்சீட்டில் ஆங்கில அகர வரிசைப்படி முதலில் மீராகுமார் பெயரும், அடுத்ததாக ராம்நாத் கோவிந்த் பெயரும் இடம் பெறும்.  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் பச்சை நிறத்திலும்,  சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இளம் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.   கொடுக்கப்படும் ஊதா கலர் பேனா வினால் தங்கள் தேர்வைக் குறிக்க வேண்டும்.   வேறு வண்ண பேனாக்கள் உபயோகப்படுத்தும் வாக்குச்சீட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்படும்

டில்லியில் வாக்கு செலுத்த விரும்பும் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணையத்திடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும்.  பா ஜ க வின் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் அமித்ஷா, தற்போது டில்லியிலிருந்து வாக்களிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுலை 20ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்படும்.  ஜுலை 23ஆம் தேதி அன்று, தற்போதைய ஜனாதிபதி பிரணாப் முகரிஜிக்கு பிரிவுபசார விழா நடைபெற உள்ளது.