டில்லி

நாளை காங்கிரஸ் கட்சி வருமான வரித்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தற்போது ரூ.1,800 கோடி அபராதம் கேட்டு காங்கிரஸ் கட்சிக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரி நோட்டிஸ் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து மாநில மற்றும் மாவட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.