திருப்பூர்: இன்றைய தொழிலாளி நளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும், தொழிலாளிகள் வளரும் ஊராக திருப்பூர் அமைந்துள்ளது என திருப்பூரில் தொழில்முனைவோர் மாநாட்டை தொடங்கிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” MSME நிறுவனங்களின் வளர்ச்சிக்காக ரூ.167.58 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவியுடன் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ என்ற தொழில்முனைவோர் திருப்பூர் மண்டல மாநாடு திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பீஸ் விஸ்டா அரங்கத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. விழாவில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம், பிணையில்லாத கடன் வசதிக்கான தமிழ்நாடு கடன் உத்தரவாத திட்டம், தாமதமான வரவினங்களுக்கு தீர்வு காணும் தமிழ்நாடு வர்த்தக வரவுகள் தள்ளுபடி தளம், நாரணாபுரம் பின்னலாடை குழுமத்திற்கான பொது வசதி மையம் ஆகிவை இடம்பெற்று உள்ளது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கோயம்புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். அதையடுதுத, “தொழில் தொடங்குவது எப்படி” என்ற FaMe TN-ன் தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்டார் தொடர்ந்து , கயிறு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு மானிய உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். அங்கு, பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த மாநாட்டில் பேசிய முதலர்வர் ஸ்டாலின், தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளி வளரும் ஊராகவும் திருப்பூர் அமைந்துள்ளது. நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி, இன்றைய தொழிலாளி நளைய முதலாளி என்பது திருப்பூருக்கு பொருந்தும். பெருந்தொழில்களை மட்டும் நம்பி இருக்காமல் சிறு, குறு, நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது.

“தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மூலம் இந்த அரசு பொறுப்பேற்றதில் இருந்து 2092 நிறுவனங்களுக்கு 2013 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 99 விழுக்காடு MSME நிறுவனங்களுக்குத்தான் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகளை வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஒற்றைச்சாளர இணையதளம் 2.0-வை நான் கடந்தாண்டு ஜூலை மாதம் தொடங்கி வைத்தேன். அதில் இதுவரை MSME நிறுவனங்களிடமிருந்து 10 ஆயிரத்து 555 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 9ஆயிரத்து 212 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 87 விழுக்காடு விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 15மாத காலத்தில் நடத்திய முதலீட்டார்ளர்கள் மாநாடு மூலம் 220 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது,3 லட்சத்திற்கும் மேல் வேலைவாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், இளைஞர்கள் படிப்பில் மட்டுமல்ல அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாக கொண்டு வாழ்க்கையிலே வெற்றி பெறுவதற்காக “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் திட்டம் மாநிலம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

தற்போதைய நான்காம் தொழில் புரட்சி காலத்தில் புதிய தொழில்நுட்பங்களை நாம் பயன்படுத்தியாக வேண்டும். அதற்கு வழிகாட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழக அரசு கைகோர்த்திருக்கிறது. ஒவ்வொரு மாவட்ட தொழில் மையத்திலும், ஒரு ஏற்றுமதி வழிகாட்டி மையம் விரைவில் தொடங்கப்படும்.

தொழில்கள் சென்னை அல்லது குறிப்பிட்ட மாநகரத்தை மட்டுமே மையப்படுத்தி அமைந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.

 முதல்வராக பொறுப்பேற்று 4 முறை திருப்பூருக்கு வந்து விட்டேன். இனியும் வருவேன்;  திருப்பூரை தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி. பெருந்தொழில்களை மட்டுமே நம்பியிருக்காமல் சிறு குறு நடுத்தர தொழில் ஊக்கமடைய வேண்டும் என அரசு விரும்புகிறது  அனைத்து மாவட்டங்களும் சீராக வளர அரசு முயல்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.