சென்னை

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாகத் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் வருகிற 6- ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று தெரிவித்து உள்ளது.

இன்று தமிழகத்தின்  சில மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

நேற்று இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும், தொடரும் கனமழையையொட்டி  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது திண்டுக்கல், நெல்லை, தென்காசி, தேனி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.