வால்பாறை

விடிய விடியப் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு தீவிரம் அடையாமல் உள்ள போதிலும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  குறிப்பாக வால்பாறையில் நேற்று  முன்தினம் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்ய தொடங்கி பின்னர் அது தீவிரம் அடைந்து  இரவு பகலாகப் பெய்து வருகிறது.

இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது  தமிழக அரசின் உத்தரவின் பேரில் மாநில பேரிடர் மீட்பு படைத் துணை காவல்துறை சூப்பிரண்டு குமார் தலைமையில் மிதவை படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்களுடன் 100 காவலர் வால்பாறையில் உஷார் நிலையில் முகாமிட்டு உள்ளனர்.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி அறிவித்துள்ளார்.

கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது ஆற்றங்கரையோர குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க நிவாரண முகாம்களும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ குழுவினரும் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.