துரை

ன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்குகிறது.

ஆண்டு முழுவதும், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இவற்றில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு திருவிழா, நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்ற திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை.

இதில் இன்று நவராத்திரி உற்சவ விழா 24-ந் தேதி வரை நடக்கிறது. இந்த நாட்களில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சன்னதியில் உள்ள மீனாட்சி அம்மனுக்குத் திரை போட்டு அபிஷேகம், அலங்காரம், கல்பபூஜை மற்றும் சகஸ்ரநாம பூஜை போன்ற விஷேச பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்களுக்கு அர்ச்சனை, மூலஸ்தான அம்மனுக்கு நடத்தப்படாது. மாறாகக் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குத் தான் அர்ச்சனைகள் செய்யப்படும்.

இந்த நவராத்திரி திருவிழாவையொட்டி அம்மன் சன்னதி 2-ம் பிரகாரத்தில் உள்ள கொலு மண்டபத்தில் எழுந்தருளும் உற்சவர் மீனாட்சி அம்மன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிப்பர். இன்று ( 15-ந் தேதி) ராஜராஜேஸ்வரி அலங்காரமும்,, 16-ந் தேதி அர்ஜுனனுக்குப் பாசுபதம் அருளியது. 17-ந் தேதி ஏகபாத மூர்த்தி, 18-ந் தேதி கால்மாறிஆடியபடலம், 19-ந் தேதி தபசு காட்சி, 20-ந் தேதி ஊஞ்சல், 21-ந் தேதி சண்டேசா அனுக்கிரஹமூர்த்தி, 22-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 23-ந் தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும் செய்யப்பட்டு தினமும் சிறப்புப் பூஜை நடக்கிறது.

இதை தவிர 13 அரங்குகளில் அலங்கார பொம்மைகளுடன் கொலுச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.  நவராத்திரி திருவிழா நடைபெறும் நாட்களில் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, கர்நாடக சங்கீதம், தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கோவில் இணை ஆணையர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

நவராத்திரி திருவிழாவையொட்டி பொற்றாமரை குளம், கோபுரங்கள், மற்றும் சன்னதிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.