சென்னை

இன்று முதல்வர் மு க ஸ்டாலின் ஊராட்சி மணி திட்டத்தின் அழைப்பு மையத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழகத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த ஊராட்சி மணி அழைப்பு மையம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் புகார் தீர்க்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களைத் தெரிவிக்க 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மனுநீதி சோழன் கதையை முன்னோடியாகக் கொண்டு ஊராட்சி மணி என்ற பெயர் திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மையம் குறைகளை உடனடியாகத் தீர்ப்பதை உறுதி செய்து மக்களுக்குப் பாரபட்சமற்ற, சமமான சேவையை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணமில்லா சேவை ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தில் தொடங்கப்படுகிறது..

தவிர சமூக வலைத்தளங்கள் மூலமும் குறைகள் பெறப்பட உள்ளன. அளிக்கப்படும் புகார்களின் தீவிரத்தன்மை அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டு, உரியத் தீர்வு காணப்படும். சமூக ஊடகங்கள் மூலம் பெறப்படும் புகார்களும் குறைதீர் மையத்தில் ஒருங்கிணைக்கப்பட்டு, அவற்றுக்குத் தீர்வுகாண உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு அறிவித்துள்ளது.