சென்னை

சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வாச்சாத்தி பாலியல் கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.

கட்ந்த 1992 ஆம் வருடம் ஜூன் 20 ஆம் தேதி தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் சந்தன மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த இளம் பெண்கள் 18 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், 4 ஐ எஃப் எஸ் அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் என்று 215 பேர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். க்டந்த் 2011 ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த தர்மபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

வாச்சாத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 4 ஐஎப்எஸ் அதிகாரிகள் உள்பட 17 வனத்துறையினரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், 5 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓராண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வாச்சாத்தி மலைக் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இன்று இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனு மீது நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு அளிக்க உள்ளார்.