சென்னை

இன்றும் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தற்போது தென் மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா உள்பட வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், தென் மேற்கு பருவமழை காலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழைக்கு அதிக வாய்ப்பு இருக்கும். அத்துடன் வெப்பசலனம், காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாகவும் மழை பெய்யும்.

வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளையொட்டிய வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இதனாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தில் கடந்த 2 தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது.

இன்றும் நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் நேற்று காலை முதல் கருமேகங்கள் சூழ்ந்தபடி, லேசான சாரல் மழையும், அவ்வப்போது மிதமான மழையும் பெய்தது. இன்றும் லேசானது முதல் மிதமான மழை நகரின் சில பகுதிகளில் பெய்ய வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.