திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது.  நேற்று ஒரே நாளில் கேரளாவில் ஒமிக்ரான் தொற்று 62 அதிகரித்து மொத்த எண்ணிக்கை 707 ஆக உயர்ந்துள்ளது.   கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அதில் ஒன்றாக இன்று முழு ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து, ““நாளுக்கு நாள் கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு இன்று மற்றும் வருகிற 30-ந் தேதி அன்று முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த இரு நாட்களில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் நீண்ட தூர வழித்தடங்களில் மட்டும் கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படும்.

தவிர மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்குத் தடை இல்லை. கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லை.  மேலும் திருவனந்தபுரம், எர்ணாகுளம், பாலக்காடு, இடுக்கி, பத்தனம் திட்டா, வயநாடு ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

மேலும் திரையரங்குகள், பார்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள்.  நேற்று ஒரே நாளில் கேரளாவில் 62 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. கேரளாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 707 ஆக உயர்ந்து உள்ளது” என்று அறிவித்துள்ளார்.