டில்லி

ன்று காவிரி மேலாண்மை ஆணையர் அவசரக் கூட்டம் டில்லியில் நடைபெறுகிறது.

டில்லியில் சில நாட்களுக்கு முன் காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டம் நடைபெற்றது. கர்நாடகம், தமிழக அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட அதிகாரிகள், தமிழகத்திற்கு அடுத்த 18 நாட்களுக்குத் தினமும் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆயினும் தமிழகத்துக்கு நீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை என்றும், தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்தது.

இன்று டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் கர்நாடக அதிகாரிகளுக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறும் இந்த அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் நிலை குறித்து எடுத்துக் கூறுவதோடு, காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவைக் கர்நாடக அரசு பின்பற்ற உத்தரவிடுமாறு தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறப்பதை எதிர்த்து, கன்னட அமைப்புகள் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று வரும் நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநில எல்லை வரை மட்டுமே தமிழக பதிவெண் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.