பெங்களூரு

ன்று தமிழகத்துக்குக் காவிரி நீர் திறந்து விடுவதை எதிர்த்துக் கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வது தொடர்பாகப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து அக்டோபர் 15-ந் தேதி வரை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடக் கர்நாடகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள், கன்னட அமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் நேற்று நள்ளிரவில் இருந்து இன்று நள்ளிரவு 12 மணிவரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பெங்களூரு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். பெங்களூருவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இன்று கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள், தமிழக எல்லைகளில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுப் பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இதைப் போல் தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் சுமார் 500 பேருந்துகள், ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் சத்தியமங்கலம் வழியாகக் கர்நாடகாவிற்குச் செல்லும் பேருந்து மற்றும் சரக்கு வாகனங்கள் சோதனை அடிப்படையில் அனுமதிக்கப்படுகின்றன.

இன்று பெங்களூருவில் 3-வது முறையாக முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.