கொல்கத்தா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய 2 ஆவது அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்ரிக்க அணியுடன் மோதுகிறது. 

தற்போது இந்தியாவில் நடைபெறுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இன்று 2-வது அரையிறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 2 மற்றும் 3- ஆம் இடங்களை பிடித்துள்ள தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை, முதல் இரண்டு லீக் ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்த அந்த அணி, அடுத்த அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டேவிட் வார்னர், மிட்சேல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் பார்முக்கு திரும்பினால் அணிக்கு கூடுதல் பலத்தை சேர்க்கும்.

தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை அந்த அணி பேட்டிங்கில் அசுர பலத்துடன் காணப்படுகிறது. டி காக், வென் டர் டசன், மார்க்ரம், கிளாசன், மில்லர் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். அனைவரும் அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். பவுலிங்கில் ரபாடா அனுபவத்தை காட்டுகிறார். இங்கிடி, யான்சென், மஹராஜ் ஆகியோரும் அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

இந்த ஆட்டத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் எனக் கூறலாம். டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை தேர்வுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்று கோப்பை வெல்லும் முனைப்பில் தென் ஆப்பிரிக்காவும், 6-வது முறையாக கோப்பைவை வெல்லும் ஆசையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்க உள்ளதால், இந்த அரையிறுதி ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்குத் தொடங்க உள்ளது.