சென்னை

இன்று மின்சார ரயில்கள் ரத்து காரணமாக மெட்ரோ ரயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன

இன்று சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே காலை 10 மணி முதல் மதியம் 2.45 மணி வரை மின்சார ரயில்கள் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.  சென்னை நகரில் முக்கிய போக்குவரத்து சாதனமாக மின்சார ரயில்கள் உள்ளதால் மக்கள் மிகவும் துயரடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில்,

“சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.18 மணி முதல் மதியம் 2.45 மணி வரையில் மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

எனவே பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது. கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இன்று ஒரு நாள் மட்டும் இயக்கப்படும். 

விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.   ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 3 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சென்னை சென்டிரல் மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். 

சென்னை சென்டிரல் மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை (கோயம்பேடு வழியாக) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்” 

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.