சென்னை

ன்று முதல் ஒரு கிலோ தக்காளி ரூ.60 என ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது

கடந்த 2 வாரங்களாகத் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.  குறிப்பாகக் காய்கறிகள் விலை அதிலும் சமையலுக்கு முக்கிய தேவையான தக்காளி விலை எகிறி வருகிறது.

இன்று முதல் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தக்காளி விற்பனை தொடங்கியுள்ளது.

இதைப் போல் சென்னையில் உள்ள 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை எனப் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.  இங்கு  ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு கிலோ தக்காளி மட்டுமே ஒருவருக்கு வழங்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு கடையிலும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

”இவ்வாறு ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்த கட்டுப்பாடும் இல்லை  குடும்ப அட்டையைக் காண்பிக்கவும் தேவையில்லை. பொதுமக்கள் அருகில் உள்ள தக்காளி விற்கப்படும் எந்த ரேஷன் கடைக்கும் சென்று பணம் கொடுத்து தக்காளி வாங்கலாம் ”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.