சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாக  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டது.

அதன்படி, இந்த தேர்வு  விண்ணப்பித்தவர்களில் தகுதியான பட்டதாரிகளுக்கான முதல்நிலைத் தேர்வு 2024 செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 5.81 லட்சம் பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. அதில் 29,809 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து, தேர்வு பெற்றவர்கள், அடுத்தபடியாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும். அதற்கான தேர்வு தேதிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன. அதன்படி, இந்த  இந்த தேர்வுகள் பிப்ரவரி 8 மற்றும 23ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்றர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஹால் டிக்கெட்டுகளை www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.