சென்னை:
ருவாய் மற்றும் பேரிடர் துறையில் 110 வட்டாட்சியர்கள் துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பணிபுரியும் வட்டாட்சியர்களுக்கு பணி உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “மாண்புமிகு உச்சநீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்புரை வழங்கியது.

உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசு ஆணையின்படி, தற்போது வட்டாட்சியர்களாக பணிபுரியும் 110 நபர்களுக்கு துணை ஆட்சியர்களாக பதிவு உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டு வரையிலான துணை ஆட்சியர் பதவி உயர்வு பட்டியலுக்கான ஆணைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது” என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.