சென்னை: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக,  பாஜக தலைவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தஞ்சையில், லாவண்யா என்ற பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்த மாணவியிடம் பேட்டி எடுத்து இரு வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக, மதமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதால்தான், அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. இது தொர்பாக பாஜக போராட்டம் நடத்தி வருகிறது.

இந்த  நிலையில், சென்னையில் உள்ள  டி.ஜி.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி  வழக்கறிஞர்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் குஷ்பூ, எச்.ராஜா செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது.