சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் பகுதி மக்களை சந்திக்கும் விஜய்க்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, காவல்துறை ஒதுக்கிய இடத்தில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், கூட்டம் கூடக்கூடாது என்று பல நிபந்தனைகளை அறிவித்து உள்ளது.

நடிகர் விஜயின் கட்சியான தவெக பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், அந்த பகுதியை சேர்ந்த 13 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போராடி வருகின்றனர். அவர்கள் போராட்டம் 900 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. ஆனால், அரசு கிராம மக்களை கண்டுகொள்ளாமல் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை சந்தித்து பேச எந்தவொரு அரசியல் கட்சிகளுக்கும், சமூக ஆர்வலர்களுக்கு தடை விதித்துள்ள தமிழ்நாடு அரசு, கடும் முயறசிக்கு பிறகு, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து வரும் திங்கட்கிழமை ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து விஜய் ஆதரவு தெரிவிக்கிறார். இதனால் விஜய் சந்திப்பு நிகழ்ச்சிக்காக 5 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், பரந்தூர் மக்களை சந்திக்க உள்ள விஜய்க்கு காவல்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பரந்தூரில் பொதுமக்களை விஜய் சந்திக்க 2 இடங்களை ஒதுக்கியுள்ள காவல்துறை அதில் ஒன்றில்தான் மக்களை சந்திக்க வேண்டும் என்றும், 2 இடங்களில் எந்த இடத்தில் பொதுமக்களை சந்திக்கிறார் என்பதை இன்று மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த மக்கள் சந்திப்பின்போது, அதிக கூட்டத்தைக் கூட்டக்கூடாது, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டும்தான் வந்து சந்திக்க வேண்டும், வேறு யாரும் அனுமதிக்க முடியாது என பல்வேறு நிபந்தனைகளை அறிவித்து உள்ளதுடன், இந்த மகக்ள் சந்திக்கான கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளது.
காவல்துறையினரின் இந்த நிபந்தனைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சந்திப்பு என்பதால், மக்களை கூட வைத்து அவர்களின் கருத்துக்களை பெறுவதுதான். ஆனால், தமிழநாடு காவல்துறையே தனித்தனியாக சந்திக்க வேண்டும் என்றும், மக்கள் கூடக்கூடாது, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என பல நிபந்தனைகளை விதித்துள்ளது சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பேர் மக்கள் சந்திப்பு அல்ல, தனி நபர் சந்திப்பு, இதை அங்கு சென்றுதான் விஜய் நடத்த வேண்டும் என்பது இல்லையே, இதற்கு ஏன் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் கடுமையாக விமத்சித்து வருகின்றனர்.