சென்னை : கொரோனா தடுப்பு பணிகளில் களம் இறங்கி இருக்கும் சுகாதார ஊழியர்கள், காவல்துறையினருருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அதன் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது, அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், ஊரடங்கை கண்காணிக்கும் போலீசாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு உடைகள் பயன்படுத்தப்பட்டாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் கொரோனா தொற்று அபாயம் இருக்கிறது. எனவே, கொரோனா தடுப்பு பணிகளில் இறங்கி உள்ள சுகாதார ஊழியர்கள், போலீசாருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகளை வழங்க  சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது.

அதாவது, 10 நாட்களுக்கு தினமும் வைட்டமின் சி, ஜிங்க் ஆகிய மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் போன்றவற்றையும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.