சென்னை

ன்றுடன் முடிவடையும்,கொரோனா ஊரடங்கை ஜனவரி 31 வரை நீட்டித்த தமிழக அரசு மேலும்  சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த இந்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25 முதல் முழு ஊரடங்கு அறிவித்தது. அதையொட்டி நாடெங்கும் அனைத்து பணிகளும் முடக்கப்பட்டன.  அதன்பிறகு மத்திய அரசு சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவித்து வருகிறது.  அத்துடன் இந்த தளர்வுகளை அந்தந்த மாநில நிலையைப் பொறுத்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என அறிவித்துள்ளது.

தமிழக அரசு விடுத்துள்ள ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது.  இதையொட்டி இன்று தமிழக அரசு இந்த ஊரடங்கு மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜனவரி மாதம் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.  அத்துடன் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் மேலும் சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக, “தமிழகத்தில் திரைப்படம் மற்றும் சின்னதிரை உட்படத் திரைப்பட தொழிலுக்கான உள்ளரங்கு மற்றும் திறந்த வெளியில் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு வெளியிடப்பட்டுள்ள உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டுப் பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கை உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் நேரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி வழக்கமான நேர நடைமுறைகளைப் பின்பற்றியும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம்” எனத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கு தொடரும் என்றும் காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.