சென்னை: தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

கடந்த வாரம் கூடிய தமிழக சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டம் தடுப்பு மசோதா கூடுதல் ஷரத்துக்களுடன் தாக்கல் செய்யப்பட்டது. மசோதா மீது அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் பேசியதுடன், குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், அந்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து, இந்த சட்ட மசோதா அரசிதழில்  வெளியிடப்பட்டு விரைவில் சட்டமாக அமலுக்கு வரும். ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மூலம், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.