சென்னை

தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள் பற்றி தற்போது  ஆலோசனை நடத்தி வருகிறார். 

நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது என்றும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது என்றும் வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்து இருந்தது.  இதையொட்டி வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.  ஏற்கனவே மேற்கொண்டுள்ள பணிகளை மட்டும் முடிக்க அதிகாரிகளுக்கு சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். புதிதாகச் சாலை, வடிகால் பணிகளை தொடங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த ஆலோசனைக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், போக்குவரத்து கூடுதல் ஆணையர், நெடுஞ்சாலைத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.