சென்னை

முதல்வர் மு க ஸ்டாலினுக்கு 2023 ஆம் ஆண்டின் சிறந்த மனிதர் விருதை செஸ் கூட்டமைப்பு வழங்கி உள்ளது..

கடந்த் 28.7.22 முதல் 10.8.22 வரை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட், இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில், பல்லவர் காலச் சிற்பக் கலையினை பறைசாற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரமான மாமல்லபுரத்தில் மிகச் சிறப்புடன் நடைபெற்றது. இதில் சர்வதேச அளவில் 185-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சதுரங்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர்.

தமிழக முதல்-வர் மு.க.ஸ்டாலின் 44-வது செஸ் ஒலிம்பியாட் நடத்துவதற்குத் தமிழக அரசின் சார்பில் ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, போட்டி நடத்த அனுமதி கிடைத்த 4 மாத காலத்துக்குள் 44-வது செஸ் போட்டிகளையும், அதன் தொடக்க மற்றும் நிறைவு விழாவை ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக உலகமே வியக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டினார்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி, இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் சதுரங்கப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படக் காரணமாக விளங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாபியில் ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் 1.3.2023 அன்று நடைபெற்ற ஆசிய செஸ் சிறப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், 2023-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஆசிய செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவர் பரத் சிங் சவுகான் பெற்றுக் கொண்டார்.

நேற்று 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி  ஆசிய மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் சதுரங்க போட்டி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தியதற்காக ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட 2023-ம் ஆண்டிற்கான சிறந்த மனிதருக்கான விருது முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டது.