சென்னை

பாஜகவுக்கு வரும் தேர்தலுடன் முற்றுப்புள்ளி  வைப்போம் எனத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பின்ராயி விஜயன் மத்திய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டைக் கண்டித்தும், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி கோட்பாட்டைப் பாதுகாக்கும் வகையிலும், டில்லி, ஜந்தர்மந்தரில் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அந்த காணொலியில்,

“வணக்கம்! கேரள மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயன் அவர்களே! சி.பி.ஐ.எம். பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களே! பிரியப்பட்ட கேரள மக்களின் பிரதிநிதிகளே! திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்த தமிழக மக்கள் சார்பில் என்னுடைய வணக்கம்!

இந்த போராட்டத்தில் பங்கெடுக்க பினராயி விஜயன் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார். நான் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு, நேற்றுதான் தாயகம் திரும்பினேன். அதன் காரணமாக, என்னால் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க முடியவில்லை. எங்களுடைய கட்சியின் சார்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் எம்.பி.க்களை அனுப்பினேன்.

கேரளாவில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய உங்களை டில்லிக்கு வந்து போராட்டம் நடத்த வைத்த மிக மோசமான அரசியல் சூழலை நினைத்து வருத்தப்படுகிறேன். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவும் டெல்லிக்கு நேற்று வந்து போராட்டம் நடத்தி இருக்கிறார்.

இன்று தி.மு.க.வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. நிதிப்பகிர்வில் தங்களின் மாநிலத்திற்கு பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிராக எல்லா மாநிலங்களும் போராட்டம் நடத்துகிற சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இதற்குக்காரணமான மத்திய பா.ஜ.க. அரசு மக்கள் மன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை.

சமூக நீதி காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது, தமிழக முதல்வர் கலைஞரிடம் ஒரு கருத்தை கூறினார்.

“தமிழகத்தின் கோரிக்கைக்காக நீங்கள் ஒரு முறை கூட டெல்லிக்கு வர தேவையில்லை. அப்படி ஒரு சூழ்நிலையை உருவாக்க மாட்டேன், தமிழகத்தில் இருந்தபடியே சொன்னால் போதும், நிறைவேற்றி தருவேன்” என்று கூறினார். மாநிலங்களை மதிக்கிற, மாநில மக்களையும் மதிக்கின்றவர்களாக முந்தைய பிரதமர்கள் இருந்தார்கள். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டிகளை போல நினைக்கிறார்.

மாநிலங்கள் இருப்பதோ – மாநிலங்களுக்கு முதல்-அமைச்சர்கள் இருப்பதோ –அவருக்கு பிடிக்கவில்லை. இத்தனைக்கும் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்து, அதன்பிறகு பிரதமர் ஆனவர் அவர்.

ஆனால், பிரதமர் ஆனதும் அவர் செய்த முதல் செயல், மாநிலங்களின் உரிமையை பறித்ததுதான். நிதி உரிமையை பறித்தார்; கல்வி உரிமையை பறித்தார்; மொழி உரிமையை பறித்தார்; சட்ட உரிமையை பறித்தார்.

மாநிலங்களின் நிதி உரிமையை பறிப்பது ஆக்ஸிஜனை நிறுத்துவதற்கு சமம். அதைத்தான் பா.ஜ.க. அரசு செய்து வருகிறது. இது ஏதோ எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் நடக்கிறது என்று பா.ஜ.க முதல்-மந்திரிகள் நினைக்க வேண்டாம்.

நாளை உங்கள் மாநிலங்களுக்கும் இதே கதிதான் என்று எச்சரிக்கையாகவே சொல்ல விரும்புகிறேன். பா.ஜ.க அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு உறுதியோடு போராடி வருகிறது. அதே பாணியில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் போராடி வருகிறார்.

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு மாபெரும் நிதி நெருக்கடி பேரிடரை எல்லா மாநில அரசுகளும் சந்திக்கிறோம். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து ஆளக்கூடிய மத்திய அரசு, இந்த நிதி நெருக்கடியை நீக்குகிற வகையில் செயல்பட வேண்டும். ஆனால் அப்படி செயல்படவில்லை. மாநிலங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக கடன் வாங்குவதற்கு கூட தடையை ஏற்படுத்துகிறார்கள். மாநிலங்களுடைய பொதுச்செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கான பொதுக்கடன் என்பது, இந்திய அரசமைப்பு சட்டத்தின்படி, மாநில சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டது. மக்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்வது மாநில அரசுகள்தான்.

மாநில அரசிடம் தான் எல்லா அன்றாட தேவைகளையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதை எல்லாரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாக வேண்டும்.

‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் நம்முடைய ஒற்றுமையின் மூலமாக, இந்திய அரசை கைப்பற்றி, பாசிச பா.ஜ.க.வுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்! அனைத்து மாநிலங்களையும் மதிக்கும் – சமமாக நடத்தும் கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவோம்! பினராயி விஜயனுக்கும் கேரள மந்திரிகளுக்கும் வாழ்த்துகள். உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேறும்”

என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.