காபூல்

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் பிரதமராக மவுல்வி அப்துல் கபீரை நியமனம் செய்துள்ளனர்.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலையீட்டால் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நீக்கப்பட்டது.  அங்கு அதிகாரமிக்க பதவியில் மவுல்வி அப்துல் கபீர் இருந்தார். கபீர் மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடைகள் விதித்தது. இதையொட்டி கபீர் பாகிஸ்தானுக்குத் தஞ்சம் புகுந்தார். கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் கடந்த 2021 ஆகஸ்ட்டில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு முல்லா முகமது ஹசன்தான் ஆப்கானிஸ்தானில் ஆட்சி பொறுப்பில் நியமிக்கப்பட்டார்.

இப்போது கபீருக்கு பிரதமர் பதவியை தலிபான்கள் வழங்கி உள்ளனர்.  தற்போது முல்லா முகமது ஹசன் உடல்நலக் குறைவால் சிகிச்சையில் இருப்பதனால் கபீர் தற்போது பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.  தாலிபான்களுக்குள் அதிகாரப் போட்டி நிலவுவதாக வந்த செய்திகளைத் தாலிபான்கள் மறுத்துள்ளனர்.  மேலும் இது வழக்கமான மாற்றம்தான் என்றும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. பின்னர் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர்.  ஆயினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர்.

அவர்களின் அறிவிப்புக்கு மாறாகத் தாலிபான் நிர்வாகம், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பணிக்கு செல்ல அனுமதி மறுத்து சிறுமிகள் உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்வது தடை விதிக்கப்பட்டது.  அங்குள்ள பல்கலைக்கழகங்களிலும் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.