சென்னை: அரசு சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசியை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய திருப்பூர் சுகாதாரத்துறை அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்த நிலையில்,  திருப்பூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட கோவிட்‌ தடுப்பூசி மருந்தை,   அங்கு பணியில் உள்ள மருந்தாளுர்,  தனியார்‌ ஆடை நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இது சர்ச்சையானது. இதையடுத்து, மருந்தாளுநர் மீது   துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.