சென்னை:  சென்னையில் நாளை புரட்டாசி மாத திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம்  நடைபெற உள்ளதால், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்து உள்ளது.

சென்னையில் நாளை காலை 10.00 மணி முதல் நிகழ்சி முடியும் வரை கீழ்கண்ட இடங்களில் ஊர்வலம் செல்லும் நேரங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருப்பதி  திருக்குடை ஊர்வலம், 21 திருக்குடைகளுடன்,   நாளை (16ந்தேதி சனிக்கிழமை) சென்னை பாரிமுனையில் உள்ள சென்னகேசவபெருமாள் கோயிலில்  விசேஷ பூஜைகளுடன்  காலை 10 மணியளவில் தாரை, தப்பட்டை, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்படுகிறது. இந்த திருக்குடை ஊர்வலம்  பாரிமுனை என்எஸ்சி போஸ்ரோடு வழியாக வால்டாக்ஸ் ரோடு, யானைகவுனி மேம்பாலம், சூளை, பெரம்பூர் பேரக்ஸ்ரோடு, பட்டாளம், ஓட்டேரி வழியாக சென்று அன்று இரவு அயனாவரம் சென்றடைகிறது.

இதையடுத்து சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாளை காலை 08.00 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

அத்தகைய வாகன ஓட்டிகள் ஈ.வே.ரா சாலை, இராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மாலை 03.00 மணி முதல் ஊர்வலம் பேசின் பிரிட்ஜ்-யை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அத்தகைய வாகன ஓட்டிகள் பேசின் பிரிஜ் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை அல்லது இராஜாஜி சாலையை பயன்படுத்தலாம். மேலும், ஈ.வே.ரா சாலை, முத்துசாமி சாலை மற்றும் இராஜாஜி சாலைகளை பயன்படுத்தலாம். ஊர்வலம் மூலகொத்தளம் பகுதியை அடைந்த உடன் பேசின் பிரிட்ஜ்-ல் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஓட்டிகள் இராஜாஜி சாலை, ஈ.வே.ரா டாக்டர்.அம்பேத்கர் காலேஜ் சாலை ஆகிய சாலைகளை பயன்படுத்தலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பேசின் பாலம் சாலையில் வரும்போது சூளை ரவுண்டானவிலிருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் இராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ராஜா முத்தையா வரும்போது மசூதி பாயின்டிலிருந்து சூளை சாலையில் ரவுண்டான நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது நாரயணாகுரு சாலை ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் அவதான பாப்பையா சாலை வரும்போது பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வரும்போது டவ்டன் சந்திப்பிலிருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் நாரயண குரு சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும் போது மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பில் வரும்போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம். திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும் போது ஒட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அத்தகைய வாகனங்கள் ஒட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி காலணி (தெற்கு) தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்,

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.