திருப்பதி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்கள் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் கடந்த மார்ச் மாதம்  25ந்தேதி முதல் முழுமையாக மூடப்பட்ட நிலையில்,  சுவாமிக்கு தினமும் நடைபெறும் பூசை ஆராதனைகள் வழக்கம்போல ஆலயத்தினுள்ளே நடைபெற்றுவந்தது.
ஆனால் கடந்த மாதம் முதல் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரு கின்றன.  அதன் காரணமாக பல இடங்களில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து  83 நாட்களுக்குப் பின் திருப்பதி ஆலயம் சுவாமி தரிசனத்திற்கு கடந்த மாதம் 10ந்தேதிக்கு பிறகு அனுமதி வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் திருமலை வந்து ஏழுமலையானை தரிசித்துச் சென்றனர். இதனால், அங்கு பணியாற்றி வந்த பல ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதையடுத்து, கோவில் அர்ச்சர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டனர்.
கொரோனா பாதிக்கப்பட்ட அர்ச்சகர்கள் 16 பேர் உள்பட பல ஊழியர்கள் உடனடியாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இதனால் கோயிலை மீண்டும் மூடும்படி, தேவஸ்தானத்துக்கு வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 16 அர்ச்சகர்களும், நோய் தொற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.