அமராவதி: 52 சிறப்பு அழைப்பாளர்கள் நியமனம் குறித்த திருப்பதி தேவஸ்தான உத்தரவுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 உறுப்பினர்கள், 4 நிர்வாக குழு உறுப்பினர்கள் என 28 பேருடன் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டது. அத்துடன், அறங்காவலர் குழுவில் 52 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கும் வகையில், ஆந்திர மாநில அரசு 2 அரசாணைகளை வெளியிட்டு, பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதை எதிர்த்து, எம். உமா மகேஸ்வர நாயுடு என்பவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.  மேலும்,  3 பொது நலன் வழக்குகள்  தொடரப்பட்டது. ‘சிறப்பு அழைப்பாளர்கள் என்ற பெயரில் தொழிலதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தேவஸ்தானத்தின் மீது நம்பகத்தன்மை குறையும், அரசின் இந்த உத்தரவு  1987 ஆம் ஆண்டின் ஆந்திர மாநில அறக்கட்டளை மற்றும் இந்து மத நிறுவனங்கள் மற்றும் நன்கொடைச் சட்டத்தின் பிரிவு 96 -க்கு முரணாக இருப்பதாகவும், அதை ரத்து சய்ய வேண்டும்என்றும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நடைபெற்றது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் எஸ்.ஸ்ரீராம், சிறப்பு அழைப்பாளர்கள் டிடிடியின் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்கள் அல்லது அதன் செயல்பாடுகளுக்கு அழைக்கப்பட மாட்டார்கள் என்று வாதிட்டார். எனவே, அவர்களை TTD வாரியத்தின் உறுப்பினர்களாகக் கருதுவது சரியானதல்ல. இந்த அழைப்பாளர்களுக்கு தரிசனத்திற்காக ஒரு வாரிய உறுப்பினரின் நெறிமுறை மட்டுமே வழங்கப்பட்டது, எனவே அது சட்ட விரோதம் இல்லை என்று கூறினார்.

ஆனால், மனுதாரரின் வழக்கறிஞர்,  ஒய்.பாலாஜி, அரசு தரப்பு வாதத்தை ஏற்க மறுத், சிறப்பு அழைப்பாளர்களை நியமிப்பதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களையும், அதன் தன்மையைப் பாதுகாப்பதில் அவர்கள் எவ்வாறு பங்களிப்பார்கள் என்பதையும் அரசும், தேவஸ்தானமும் விளக்க வேண்டும் என்று கூறினார்.

இதையடுத்து கருத்து தெரிவித்த  நீதிமன்றம் அறங்காவலர் குழுவில்  சிறப்பு அழைப்பாளர்கள்  நியமனத்துக்கு தடை விதித்தும், சிறப்பு அழைப்பாளர்களை நியமனம் செய்வதற்கான அரசாணையை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டது. அரசின் இந்த உத்தரவு  (52 தனிநபர்கள் சிறப்பு அழைக்கப்பட்டவர்கள்) மேற்கண்ட சட்டத்தை மீறியது மற்றும் இந்த விவகாரம் ஒரு விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கூறி வழக்கை ஒத்தி வைத்தது.