திருப்பதி: திருப்பதி கோவிலில் சமூக இடைவெளி நிபந்தனையை கடைப்பிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சில தளர்வுகள் அடிப்படையில் வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என்று மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்து உள்ளது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட அனைத்து கோவில்களையும் திறப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
கொரோனா காலம் முடியும் வரையில் தினமும் 14 மணி நேரம் பக்தர்கள் சாமி கும்பிட அனுமதிப்பது, சமூக இடைவெளியுடன் 1 மணி நேரத்திற்கு 500 பேரை மட்டும் அனுமதிப்பது, ரூ.300 கட்டண தரிசன டிக்கெட்டுகளில் தரிசன நேரத்தை குறிப்பிட்டு ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்குதல், தினமும் 7 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிப்பது என தேவஸ்தான நிர்வாகம் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக கோவிலுக்கு சொந்தமான தங்கும் அறைகளில் 2 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 17 ம் தேதிக்கு பின்னர் கோவில் ஊழியர்களை பரிசோதனை அடிப்படையில் அனுமதிப்பது, தொடர்ந்து 15 நாட்களுக்கு உள்ளூர் மக்களை அனுமதிப்பது என்று ஆலோசித்து வருகிறது.
அதன் பின்னர் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மக்களை அனுமதிப்பது தொடர்ந்து வெளியூர் பக்தர்களை அனுமதிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. திருப்பதி வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. திருமலை வரும் வாகனங்கள் அனைத்துக்கும் கிருமி நாசினி கொண்டு தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.