திருப்பதி ஏழுமலையான் கோயில் அன்னதானத்திற்கு இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மட்டுமே இனி உபயோகப்படுத்தப்படும்.

நாள்தோறும் நடைபெறும் அன்னதானத்திற்கு என பக்தர்கள் காணிக்கை அளித்துவரும் நிலையில் அதற்கு தேவையான பொருட்களை ஒப்பந்த அடிப்படையில் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வாங்கி வருகிறது.

இந்த ஆண்டு முதல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை வாங்க உத்தேசித்துள்ள தேவஸ்தானம் அதற்காக ஆந்திர அரசின் உதவியை நாடியிருக்கிறது.

இதற்காக ஆந்திர அரசுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் நெல்லூர் மாவட்டத்தில் 1300 ஹெக்டர் நிலப்பரப்பில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளிடம் இருந்து 2640 டன் அரிசி கொள்முதல் செய்ய உள்ளது.

தவிர 62 மெட்ரிக் டன் நிலக்கடலையும் கொள்முதல் செய்ய உள்ளதை அடுத்து முதல் கட்டமாக 870 ஏக்கரில் இயற்கை விவசாய சாகுபடி துவங்கி இருக்கிறது.

இதற்கான தரச் சான்றுடன் ஆந்திர அரசிடம் இருந்து கொள்முதல் செய்ய இருக்கும் திருப்பதி தேவஸ்தானம் அதற்காக 10 சதவீதம் கூடுதல் விலை நிர்ணயித்துள்ளது.