சென்னை

செப்டம்பர் 1 வரை தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுவதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.-

“தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான முதுநிலைப் பட்டப் படிப்புகளில் முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கை 14.08.2023-ல் துவங்கி www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

மேலும் சென்னை பல்கலைக்கழக இளநிலை பாடப்பிரிவிற்கான தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், முதுநிலைப் பட்டப் படிப்பிற்கான மாணாக்கர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் 01.09.2023 வரை நீட்டிக்கப்படுகிறது.”

என்று அறிவிக்கப்பட்டுள்ளது.