சென்னை: செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உங்களை அ.தி.மு.கவை மக்கள் தூக்கிவீசும் காலம் நெருங்குகிறது என்றும் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது விராலிமலை தொகுதியில் தேர்தலைக் குறிவைத்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வருகிறார். இதுகுறித்து செய்தி வெளியிட்டதற்காக சன் டி.வி மீது தனது வெறுப்பைக் காட்டும் நோக்கில், சன் டி.வி மைக் இருந்தால் பேட்டி அளிக்கமாட்டேன் என தெரிவித்ததுடன், அந்த நிறுவனத்தன்  மைக்கை தூக்கி எறிந்தார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில்,   “புதுக்கோட்டை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் மைக்கைத் தூக்கி வீசியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அ.தி.மு.க அமைச்சரவையையே மக்கள் தூக்கி வீசும் காலம் நெருங்கி வருகிறது.

ஊடகங்களை மிரட்டுவதும், அவர்களது செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் அதிகார மமதையில் செயல்படுவதும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வழக்கமானதுதான்.

மக்கள் இதனைக் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று மட்டும் நினைக்க வேண்டாம்! அவர்களது எதிர்வினை தேர்தலில் எதிரொலிக்கும்!” என தெரிவித்துள்ளார்.