கொல்கத்தா: அரசியல் ரீதியாக பாஜகவை மண்ணில் புதைத்து நந்திகிராம் தொகுதியிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் வாக்காளர்கள் வெளியேற்ற வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி பிரச்சாரத்தில் பேசினார்.

மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தான் போட்டியிடும் தொகுதியான நந்திகிராமில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது:

நான் நந்திகிராமில் நுழைந்துவிட்டேன். இனி இது என்னுடைய இடம், நான் இங்குதான் இருப்பேன். எந்த காரணத்துக்காகவும் ஒருபோதும் வெளியேற மாட்டேன். நந்திகிராம் தொகுதி மக்களே, பாஜகவை அரசியல் ரீதியாக புதைத்து, நந்திகிராம் மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து வெளியேற்றுங்கள்.

வேறு தொகுதியிலும் நான் போட்டியிட்டிருக்கலாம். ஆனால், இந்த தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றவும் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் நந்திகிராமை தேர்ந்தெடுத்தேன் என்று பேசியுள்ளார்.  மமதாவை போன்று நந்திகிராம் தொகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.