தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கப்பட்ட தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 17 மாவட்டங்களுக்கு ஆக்சிஜன் வினியோகம்  செய்யப்பட்டு வருகிறது.  500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம் என்ற மைல் கல்லை எட்டி உள்ளதாக வேதாந்தா நிர்வாகம்அறிவித்து உள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மூடப்பட்டிருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஜிஜன் தயாரிக்க தமிழகஅரசு ஒப்புதலுடன்,  உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதையடுத்து, அங்கு கடந்த மாதம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் மருத்துவ தேவைக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்யும் பணியையும் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 5-ந் தேதி முதல் தொடங்கியது. இங்கு உற்பத்தியாகும் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ஸ்டெர்லைட் நிறுவனம்  வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ஸ்டெர்லைட் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து 500 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் வினியோகம் என்ற மைல் கல்லை எட்டி உள்ளோம். இதுவரை ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் இருந்து 542.92 டன் மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜனும், 265 டன் வாயு நிலையிலான ஆக்சிஜன் சிலிண்டர்களும் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், நாமக்கல், தர்மபுரி, ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் ஆகிய 17 மாவட்டங்களுக்கு மருத்துவ பயன்பாட்டுக்கான ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நேரத்தில் தேவையான மக்களுக்கு உதவ எங்களது வசதிகளை மேலும் மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மைல் கல்லை எட்டுவதற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.