புடாபெஸ்ட்:  உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championship Javelin Throw 2023) ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். தனது வெற்றி குறித்து கூறிய நீரஷ் சோப்ரா,  இந்த பதக்கம் இந்தியாவுக்கானது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். நீரஜ் சோப்ராவின் வெற்றியால் அவரது சொந்த ஊர் விழாக் கோலம் பூண்டுள்ளது.  இந்த வரலாற்று சாதனையை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

தங்கமகன் நீரஷ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதன் ஈட்டி எறிதலின் இறுதி சுற்று  ஆகஸ்ட் 27தேதி  இரவு நடந்தது. இதில்  இந்திய நட்சத்திர வீரரும், ஒலிம்பிக் சாம்பியனுமான நீரஜ் சோப்ரா கலந்துகொண்டு சாதனை படைத்தார். அவர்  88.17 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து முதல் இடம் பிடித்தார். இதன் காரணமாக நீரஷ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். 40ஆண்டு கால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் நீரஜ் சோப்ரா. மேலும் மற்ற இந்தியா வீரர்களான கிஷோர் 84.77 மீட்டரும், டி.பி மனு 84.14 மீட்டரும் ஈட்டியை எறிந்து 5 மற்றும் 6வது இடத்தை பிடித்தனர்.

இவரைத்தொடர்ந்து,87.82 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து பாகிஸ்தான் வீரரான அர்ஷத் நதீம்  வெள்ளி பதக்கம் வென்றார்.  86.67 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து செக் குடியரசு வீரர் ஜேக்கப் வேட்லெச் வெண்கலப் பதக்கம் வென்றார்.

புடாபெஸ்டில், கடைசி நாளில் ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.அவரைத் தொடர்ந்து மற்ற இரண்டு இந்திய வீரர்கள் டி.பி. மனு மற்றும் கிஷோர் ஆகியோர் களம் இறங்கினர். முதல் சுற்றில் 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அதைத்தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர் தனது முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார். இரண்டாவது வாய்ப்பில் 88 புள்ளி 17 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து, பட்டியலில் முதலிடம் பிடித்தார். மூன்றாவது வாய்ப்பில் 86 புள்ளி 32 மீட்டர் தூரமும், நான்காவது வாய்ப்பில் 84 புள்ளி 64 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் 87 புள்ளி 73 மீட்டர் தூரமும் வீசினார். இறுதி வாய்ப்பில் 83 புள்ளி 98 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.

நீரஜ் சோப்ராவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வந்த பாகிஸ்தான் வீரர் ஹர்சத் நதீம் 87 புள்ளி 82 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். செக் குடியரசை சேர்ந்த யக்கூப் வெண்கலம் வென்றார். இந்திய வீரர்கள் கிஷோர் 84 புள்ளி 77 மீட்டரும், டி.பி. மனு 84 புள்ளி 14 மீட்டரும் வீசி முறையே 5 மற்றும் 6வது இடங்களை பிடித்தனர்.

நீரஜ் சோப்ரா இப்போது வென்ற தங்கம் உள்பட உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மொத்தம் இரண்டு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒலிம்பிக், ஆசிய போட்டி, காமன்வெல்த், யு-20 உலக சாம்பியன்ஷிப், டைமண்ட் லீக் தடகளப் போட்டிகளிலும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அதுபோல,  நீரஜ் சோப்ரா, 2021 டோக்கியோ ஒலிம்பிக், 2022 ஆம் ஆண்டு டைமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப், உலக தடகள சாம்பியன்ஷிப் படத்தை வென்றார்,  இதையடுத்து,  பிரான்ஸ் தலைநகர் பாரீசில் அ 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியிலும் வரலாற்று சாதனை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பின்னர் நீரஜ் சோப்ரா, தனது வெற்றி குறித்து பேசும்போது,  பேசியதாவது; “முதலில் இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.  இந்த பதக்கம் இந்தியாவுக்கானது. ஒலிம்பிக் சாம்பியனாக இருந்து வந்த நான் தற்போது உலக சாம்பியனாகி உள்ளேன். என்னை தொடர்ந்து ஆதரித்த இந்தியர்களுக்கு நன்றியை தெரிவிப்பதுடன் நாட்டுக்காக மேலும், சாதிக்க வேண்டும் என்ற அவசியத்தை இந்த பதக்கம் வலியுறுத்துகிறது. தொடர்ந்து பல்வேறு களத்தில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் நம் நாட்டுக்கான பெயரை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்,  உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகள் இது திறமையான அவரின் சிறப்பை காட்டுகிறது. அவரின் அர்ப்பணிப்பு, துல்லியம் மற்றும் ஆர்வம், அவரை தடகளத்தில் ஒரு சாம்பியனாக மட்டுமல்லாமல், விளையாட்டு உலகிலேயே ஒப்பற்ற சிறப்பின் ஓர் அடையாளமாக ஆக்கியுள்ளது”  என குறிப்பிட்டுள்ளார்.