சென்னை: சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு, அதிமுக பொதுக்குழுவை எடப்பாடி கூட்டியது சரியானதே என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளதுடன் இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோவை செல்வராஜ் கூறினார். மேலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஜூலை 11-ல் எடப்படி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதுதொடர்பாக, தனி நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த , 2 நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பின் மூலம், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், ஓபிஎஸ்-க்கு பின்னடைவு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததால், அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உயர்நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம். பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து அதிமுக யார் பக்கம் என சொல்ல முடியாது. ஒன்றரை கோடி தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு பின்னடைவாக இருக்காது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அளித்தது இறுதி தீர்ப்பல, தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து மேல்முறையீடு செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார்.

தீர்ப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை செல்வராஜ்,  இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றவர், இது இறுதி தீர்ப்பல்ல, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்றவர்  அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வழி நடத்த முடியும் என்றும்,  இபிஎஸ் பொது செயலாளராவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்று விமர்சித்ததுடன்,  அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் செயலால் மனம் வருந்தி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.